ஏ கடலே! நாம் மனிதர்கள் உன்னை எதிர்கோள்வோம்


ஏ கடலே!

உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகின்றோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா?

நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?

துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?

உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?

நீ அனுப்பியது
சுனாமி அல்லபிரளயத்தின் பினாமி

பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி

குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்

போதாதென்றுஉன் டினோசார் அலைகளை அனுப்பி
எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?

சுமத்ராவை வென்றான்சோழமன்னன் ராஜராஜன்
அந்தப் பழிதீர்க்கவாசுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?

காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்

பிணங்களை அடையாளம்
காட்டப்பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

நாம் மனிதர்கள்
எதிர்கோள்வோம்

மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்

ஆக்கம்
கவிப்பேரரசு வைரமுத்து

Read more...

கிறிஸ்த்துமஸ் கால நினைவுகள்

கிறிஸ்த்துமஸ் வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். பின்ன எங்களைப்போல அவர்களுக்கு [கிறீஸ்த்தவர்களுக்கு] வருடம் முழுவதும் பண்டிகைகள் இல்லை தானே :))

யாழ்ப்பாணத்து கடைத்தெருக்களெல்லாம் தள்ளுபடி விற்பனைகளும் கூட்டங்களும் குவியத் தொடங்கி வர்ணவிளக்குகளுடன் களைகட்டத் தொடங்கிவிடும் கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கண்களைப் பறிக்கும் அலங்காரங்களுடன், யாழ்ப்பாணம் அமர்க்களப்பட ஆரம்பித்து விடும் தெருவிலுள்ள ஒவ்வொரு கடையும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில், அலங்கார வேலைகள் செய்திருப்பார்கள் அது கடைகளுக்கு புது பொலிவையும், அழகையும் கொடுக்கும் ஆங்காங்கே கிறிஸ்மஸ் தாத்தா அமர்ந்து கொண்டு குழந்தைகளுடன் வியைளாடிக்கொண்டுமிருப்பார்.


நான் கிறீஸ்த்தலப்பாடசாலையில் படித்ததாலோ என்னவோ நண்பர்களில் அனேகர் கிறீஸ்த்தவர்கள் எனவே கிறிஸ்த்துமஸ் என்றால் எனக்கும் ஒர் பெருநாள் தான் கிறிஸ்த்துமஸ் மரங்களை அலங்கரிப்பதுவும் , இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவையாகும். கிறிஸ்த்துமஸ் காலமென்றால் நான் படிச்ச யாழ் பரி யோவான் கல்லூரியில் {கிறிஸ்த்தலப்பாடசாலை தானே }பெரிய அமளியாயிருக்கும் மரத்தைசோடிக்கிறது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தி அலங்காரப்படுத்துவது என களைகட்டும் . இவற்றுள் நான் பொதுவாக தலை வைப்பதில்லை ஏனெனில் எனக்கு மட்டுமன்றி என்போன்ற பலருக்கு கிறிஸ்த்துமஸ் காலத்தில் அடைக்கலம் தருவது என் வீட்டின் அருகாமையிலிருக்கும் சிறுவயது முதல் ஒன்றாய்த்திரிந்த நண்பன் கனி வீடுதான் கிறிஸ்த்துமஸ் நாளுக்கு முதல்நாளும் அடுத்த நாளும் எமது பொழுது அங்கேயே கழியும் { என்ன பகீ ஞாபகமிருக்குதே ? }


கிறிஸ்துமஸ் நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அழங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கம். மரத்தின் அருகில் குடில் போல் அமைத்து இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் வழக்கம் அதற்காக தூங்கும் பொம்மைகள் இருக்கும் பெட்டிகளை எடுத்து பத்திரமாக கீழே இறக்குவது ஒரு சுவாரசியமான வேலை. அவ்வாறு அவற்றை இறக்கும் பொழுது தான் சென்ற வருடம் செய்தவையெல்லாம் மனதில் ஓடும் இறக்கியவற்றை கழுவி காயவைத்து விட்டு வேண்டிய சவுக்கு மரங்களை வெட்ட பத்துப்பதினைந்து பேர்வரையில் கிளம்புவோம் சில நேரங்களில் அருகிலிருக்கும் தெருக்களிலே வேலைமுடிந்துவிடும் சிலநேரங்களில் எங்கள் கஷ்ட காலமெனில் வல்லிபுரம் கோவில் வரை செல்வதும் உண்டு [பிற் காலங்களில் அவ்விடம் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஊர்காவற்துறைப்பக்கமாக செல்லநேர்ந்தது]


வெட்டிக்கொண்டுவரும் மரங்களைக்கத்தரித்து ஒருவழியாக கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்படும் பின்னர் கலர் பல்புகளை தொங்கவிட்டு , அன்ன பிற பொருட்களையும் தொங்கவிட்டு விளக்குகளை எரியப்பண்ணும்போது இரவு 9.30 ஐத் தாண்டி விடும் அப்படியே வீட்ட வந்து சாப்பிட்டு விட்டு மறுபடி . . . .
இரவு பாடசாலை நண்பர்களுடன் பாசையூர் (பாசையூர் குருநகர் , அரியாலை போன்ற இடங்களில் மற்ற இடங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்)அந்தோனியார் கோவில் நத்தார் நள்ளிரவுப் பூசைத்திருப்பலிக்குப் போனால் அங்கே கோவில் ஒரே தீப அலங்காரமாய் ஜொலிக்கும் வாறவங்களும் புது உடுப்புங்களோட வந்திருப்பார்கள் ( நாங்க அதைப்பார்க்கத்தானே போறது ) பதினோன்றரை மணியிலிருந்து கரோல் கீதங்கள் பாட ஆரம்பித்து பாட்டும், பிரசங்கமுமா மாறி மாறி நடந்து . சரியா 12 மணி அடிச்சவுடனே 'மெர்ரி கிறிஸ்மஸ்' வாழ்த்துக்களும், சிறப்புப் பிரசங்கம், கிறிஸ்மஸ் பாட்டுக்கள் என்று கோலாகலமாக நடந்து முடியும் முடியவிட்டு அப்படியே ஊரெல்லாம் திரிந்து விட்டு வெடிகளைக் கொழுத்தி அமர்க்களப்படுத்திக்கொண்டு அடுத்த நாள் தான் வீடு திரும்புபோம் [அதுவரை சைக்கிள்ள ஊர்மேயுறது தான்]. மார்காழி மாத நிலவு பனை இடுக்குகளினூடு தெரியும் . அன்று தான் என்னவோ புதிய நிலவை பொழிவது மாதிரி இருக்கும் . நடுநிசியும் ஆயிட்டுது..... ஊர் என்னும் உறங்கவில்லை உறங்கப்போவதுமில்லை ஆங்காங்கே தூரத்தில் கிறிஸ்மஸ் பாப்பா சகிதம். கூட்டம் கூட்டமாய் வேதக்கார வீடுகளுக்கு சென்று..பாடல்கள் மூலம். கிறிஸ்து பிறந்த செய்தியை அறிவித்து கொண்டு இருப்பார்கள் [2000 வருசமாய் அறிவித்து கொண்டிருக்கிறார்களாம்..]

மறுநாள் கிறிஸ்மஸ் தினமன்று எல்லா கிறீஸ்த்தவ நண்பர்கள் வீடுகளிலுமே தடல்புடலாகச் சமையல் நடப்பதுண்டு. ஆகவே அவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு , அவர்களது விஷேஷ கவனிப்புகள் வயிற்றை நன்றாகவே நிரப்பி விடும், இதனால் வீட்டுச் சமையல் கேட்பாரற்றுக் கிடப்பதுமுண்டு . வீடு திரும்பும்போது அம்மா சமைத்ததை உள்ளே தள்ள முடியாமல் திணற, அம்மாவின் திட்டுக்களை சம்பாதித்ததும் இந்த நத்தார் காலத்தில்தான். . . .
இங்க ஒன்றைச்சொல்ல வேணும் நாங்க A/L படிக்கத்தொடங்குற காலத்தில தான் வெடிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்தன அதனால் திருநாட்களில் வெடிகள் கொழுத்துவது பெரும் குஷியைக் கொடுக்கத் தவறுவதில்லை.அதனால் தான் என்னவோ ஒருவரிடமும் அடியோ பேச்சோ வாங்குவதில்லை.


பதிவரிகளே
யேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் அவர் வருடாவருடம் தேவபாலனாய் அவதரித்து எம்மைக் களிப்பூட்டியபடிதானே இருக்கின்றார்? அப்படியானால் மரணித்து விட்ட என் நண்பர்கள் எப்பொழுது மீண்டும் ஜனிக்கப் போகின்றார்கள்
எனக்கு விடை தெரியவில்லை.

Read more...

பில்லா

இன்று பில்லா வெளியானபடியால் முதலாவது காட்சியே பார்ப்பதென முடிவானது அதற்கமைய கொழும்பு தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக நின்றிருந்தார்கள் சரி உள்ள போவமென்டால் எங்க விட்டால் தானே ஒரு மாதிரி டிக்கற்றை எடுத்து உள்ளே போயாச்சு உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது படம் தொடங்கிற நேரத்தில இருந்து கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏன் என்றால் வீறுவிறுப்பு அப்படி இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சரி கதைக்கு வருவம் பில்லா என்று உலகம் முழுவதும் தேடப்படும் கடத்தல்காரன். அவனைப்பிடிக்க பிரபு தலைமையிலான் படை ஒன்று மலேசியாலில் தந்தி தேடுதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில பில்லா அவர்களிடையே சிக்கிய நிலையில் இறந்து போகிறான் . எனவே அந்த நேரத்தைப்பயன்படுத்தி பிரபு பில்லா மாதிரியே இரக்கும் வேலுவை பில்லாவின் கூட்டத்தினுள் அனுப்புகிறார் என்ன ரஜினி நடித்த பில்லா கதை தானெ பிறகென்னத்திற்கு கதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கு . . . . . .

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் பில்லா அஜித்குமாராக மறுஅவதாரம் எடுத்திருக்கிறார் . படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம். ஜேம்ஸ்பாண்டு பாணி அறிமுகக்காட்சியிலிருந்து அடடா சூப்பர் !சூப்பர்ஸ்டார் ஏற்ற பில்லா மற்றும் ராஜா இரு வேடத்தினையும் பில்லா மற்றும் வேல் என அசத்தலாக உருமாறியிருக்கிறார் அஜித்குமார் ஸ்ரீப்ரியா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவும், ப்ரவீணா நடித்த கதாபாத்திரத்தில் கனவுதேவதை நமீதாவும் தோன்றுகிறார்கள். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் (பாலாஜி கதாபாத்திரம்) சந்தானம் வேலுவின் நண்பராகவும் ரகுமான் இன்ரபோல் அதிகாரியாகவும் தோன்றியுள்ளனர்
என்னைக்கவர்ந்த முக்கியமான சில . . .
* கதை செல்லுற அளவுக்கு ஒன்றுமில்லை ஏனென்றால் அதே பில்லா கதை தான் ஆனால் அதனை தெரியாமல் படத்தை இறுதிவரை இயக்குனா கொண்டுபோயுள்ளார் அந்தவகையில் இயக்குனர் பொரிய கில்லாடி தான் ஒரிஜினல் பில்லா கதையை அப்படியே எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஒரிஜினலில் இருந்த 'தேங்காய் சீனிவாசன்' கேரக்டர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது
* இசை யுவன் சங்கர் ராஜா அருமையிலும் அருமை
* ஆங்கிலப்படங்களுக்கு நிகரான சண்டைக்காட்சிகள் என அனைத்தும் அருமை திரையரங்கை விட்டு வெளியே வரும் போது ஆங்கிலப்படமொன்று பார்த்த உணர்வு வந்தது
* நிகழ்வு களத்தின் பின்புலமாக மலேசியா அருமையாகக்காட்டப்பட்டுள்ளது ஒளிப்பதிவில் கேமிரா கோணங்கள் அதிசயிக்க வைக்கிறது. அதிகபட்ச காட்சிகளில் பின்னணியில் பெட்ரோனாக்ஸ் டவர்ஸ் தெரிவது கொஞ்சம் எரிச்சல் தந்தாலும் அருமையாக இருக்கிறது ,மலேசியாவின் தரமான அழகான இடங்கள் வசதியான கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.

* அஜித் நடனத்தில் பலபடி முன்னேறி நன்றாகவேஆட்டம் போட்டிருக்கிறார்
* பாடல்களில் 2 ரீமிக்ஸ் பாடல்களும் [வெத்தலையப் போட்டேண்டி, மை நேம் ஈஸ் பில்லா ]அருமை மற்றும் செய் , சேவல்கொடி ஆகிய பாடல்கள் காட்சியமைப்பு அருமை


ஏற்கனவே பலர் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி வருவதால் நான் அந்தவேலையைத்தொடவில்லை இறுதியாக சொல்வதென்னவெனில் பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான அதிரடித்திரைப்படம் ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் கலந்து இருப்பதால் வெள்ளி விழா நிச்சயம்!!! .

ஒரேயயொரு குறை
ஹீரோயின்கள் படம் முழுக்க கவர்ச்சி என்ற பெயரில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் ஒரிரு காட்சிகளில் இப்படி வந்தால் 'கிக்' இருக்கும். படம் முழுவதும் காட்டியதால் அலுத்துப்போகிறது இந்த விடையத்தில " DON " பறவாயில்லை

" நாம நல்லாயிரக்கவேணுமெண்டால் எத்தின பேரை வேணுமெண்டாலும் கொல்லலாம் " இது பில்லா சொலுற பஞ்ச் டயலாக் ஒன்னு.

இன்னுமொன்றும் சொல்லுறார்


" Im Back "

Read more...

சுப்பிரமணியபாரதியாரின் பிறந்த தினம்

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
--இனிதாவதெங்கும் காணோம்
--பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
--இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
--நாமமது தமிழரெனக்
--கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
--தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
--பரவும்வகை செய்தல் வேண்டும். "
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும்(டிசம்பர் 11 1882 - செப்டம்பர் 11 1921).

ஆனால் இந்த உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி ! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனுக்காக அன்று முதல் இன்று வரை நாம் என்ன செய்துள்ளோமென சிந்தியுங்கள் ? அவன் உயிர் விட்ட தமிழுக்காய் நாம் என்ன செய்துதோமெனச்சிந்தியங்கள் . அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். இன்றய தலைமுறையினரே பாரதியைப்புரிந்து கொள்ளுங்கள் அறிந்து கொள்ளுங்கள்
பத்திரிகையுலகில் பாரதி சில தகவல்கள்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் 1920 முதல் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராக பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906 செப்.1906,புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணிநம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பமூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி



Read more...

என்ன கொடுமை சார் இது ?


முந்தியொரு காலத்தில நட்சத்திர வாரத்திற்குரிய பதிவரது பதிவுகளால் தமிழ்மணம் களைகட்டும் இடையில் நட்சத்திரத்திரத்தின ஆக்கங்களை காணமுடியாமலிருக்கும் [அது அவர்களுடைய வேலைச்சுமையால் ஆக்கங்கள் எழுதமுடியாது போயிருக்கும் ] ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இந்த வாரத்திற்குரிய நட்சத்திரத்தையே காணவில்லை :(
என்ன கொடுமை சார் இது ?

Read more...

இலங்கைத்தமிழ் வீரர் முரளிக்கு வாழ்த்துக்கள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண் இனது 708 என்ற இலக்கை எட்டியதன் மூலம் புதிய தோர் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் நேற்று முறியடித்தார் இங்கிலாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தச்சாதனையைப்படைத்தார்.
இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப்படைத்தார். முரளியின் உலக சாதனையைத் தொடர்ந்து கண்டி மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இலங்கை வீரர்கள், முரளியை கட்டிப் பிடித்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினர். ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இலங்கை முழுவதும் முரளியின் உலக சாதனையை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் "சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், கல்லூரி நண்பர்கள்
சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்ததிருப்பதால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். "

முரளியின் சாதனைப் பட்டியல்
* டெஸ்ட் போட்டிகள் - 116 விக்கெட்டுகள் - 709

* 10 விக்கெட் வீழ்ச்சி - 20 முறை
* 5 விக்கெட் வீழ்ச்சி - 61 முறை.

முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி அரசு அவரது உருவம் பதித்த வட்டவடிவ தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபர், பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர்.


இது பற்றி கருத்துத்தெரிவித்த ஷேன் வார்ண் " தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்" என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். "அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்."

முரளிதரன் சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதி மலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதி மலர் முரளியின் சாதனையை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP