கார்த்திகை விளக்கீடு ஞாபகங்கள்

வரும் சனிக்கிழமை வழமைபோல் கார்த்திகைத்தீபத்திருநாள் வருகிறது . எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். அது எல்லோர் மனதையும் நிறைக்கட்டும். சமாதானமே எமக்குத்தேவை அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும் . புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அனைவருக்கும் தத்தமது பழைய கால நினைவுகள் வந்துபோகும் அந்தவகையில் எனக்கும் கார்த்திகைத்தீபத்திருநாள் நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிப்பார்க்கிறேன் ( நாம் அனேகர் கழிந்த நிகழ்வுகளோடும் தான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றதாக இருக்கிறது ) என் பதின்ம வயதுகளில் தோழர்களோடு விளக்கீடு நாட்களின் நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன்.

விளக்கீடு அன்று காலையே பருத்திவேட்டியைக்கிழித்து வெட்டிய கிழுவை மரத்தடிகளில் பந்தம் கட்டுவதும் , வழைக்குற்றியொன்றை வீட்டமுகப்பில் நடுவதற்காக வெட்டிவைப்பதுமாக வீட்டில் ஓர் இனம்புரியாத உஷார் கிளம்பிவிடும் படிப்படியாக விளக்கேற்றுவதற்காக சுட்டிகள் தேங்காய்ப்பாதிகள், திரிகள் என போர்க்களத்திற்கு போவது போல் தயாராகும் . மாலை வாழைக்குற்றியை வீட்டுப்படலைக்குமுன்னால் நட்டு அதற்குரிய அலங்காரமெல்லாம் செய்து இறுதியில் பாதிவெட்டிய தேங்காயில் திரியைப்போட்டு எரித்துவிட்டால் சும்மா ஜெகஜோதியாய் எரிவதைப்பார்க்க அழகாயிருக்கும் . வீடுகள் தோறும் தீபங்கள் அசைந்தாட அந்த காட்சியே அருமை தான்:)
அனேகமாக அந்நேரத்தில் தான் கோவில்களில் சொக்கப்பனையும் எரிபடும்
அத்தோடு நாம் வாழைக்குற்றியின் பாதுகாப்பை வீட்டு மகளீரிடம் ஒப்படைத்துவிட்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு ஏரியாவைச்சுற்றிப்பார்க்கக்கிளம்பிவிடுவம் அவ்வப்போது போகிற பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாத வழைக்குற்றிகளை நிலத்தில் சாய்ப்பதுவும் சிட்டிகளை பொறுக்கி வேறு இடத்தில் இடம்மாற்றி வைப்பதுவும் நடக்கும் .
இந்நசுவையான காலங்களெல்லாம் இனியெப்போதாவது நடக்குமா :(


"நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன். "

என்றென்றும் அன்புடன்
மாயா

Read more...

சரஸ்வதி பூசை கொண்டாடினோம் ?

" அனைவருக்கும் வணக்கம் வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த சரஸ்லதிதேவியைப்போற்றி எனது உரையை ஆரம்பிக்கிறேன் " இது நான் பாடசாலை நவாராத்திரி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது , எனது பாட்டனார் எழுதித்தர பாடமாக்கிவிட்டு சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். . . .

நவராத்திரி முடிந்து கனகாலமாயிடுச்சு இப்ப என்ன திடீரெண்டு சரஸ்வதி பூசையைப்பற்றி பதியிறன் எண்டு யோசிக்கிறியளே ஒன்டுமில்லை இந்தமுறை சரஸ்வதிபூஜையை கொஞ்சம் விசேடமாய் கொண்டாடுவம் எண்டு பெடியள் நாங்களே பொங்கல் அவல் சுண்டல் எல்லாம் செய்து , வாழை இலை மாவிலை காசுக்கு வாங்கி ( இந்தக்கொடுமையெல்லாம் கொழும்பில தான் ) கொண்டாடினம் அந்தநேரத்தில தான் ஊர் ஞாபகங்கள் அவரவர் மனதில் நிழலாடியது அதையொட்டிய பதிவே இது சற்று ? ? காலம் தாழ்த்தியமைக்கு மன்னியுங்கள் . . .
சரஸ்வதி பூசைக்காலமென்றால் நான் சின்னன்ல படிச்ச யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையில பெரிய அமளியாயிருக்கும் ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இருக்கும் அதனால அந்தந்த வகுப்பு மாணவர்கள் தங்கட தங்கட பெருமையை காட்டுறத்துக்கு பெரிய பாடு படுவார்கள் தோறணம் கட்டுறது மாலை பூ கொண்டுவந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு கலக்கு கலக்க்குவார்கள் . பின் விஜயதசமி நாளான்று ஐந்து மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் அருகாமையிலிருக்கும் கொண்டலடிப்பிள்ளையார் முன்றலில் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் குருக்கள் ஐயா நீண்டதொரு வாள் போன்ற கத்தியை வைத்துக்கொண்டு ஓடி ஓடி ஒவ்வொரு வாழையா வெட்டி கடைசி வாழையை ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வரை சும்மா M.G.R நேரடியாக கத்தி சுத்தினமாதிரி இருக்கும் இத்தின வருசத்தில நான் அந்தக்குருக்கள் ஐயா வெட்டுறமாதிரி ஒரிடத்திலயும் பார்க்கேல்ல . அளவெட்டியில இருக்கிற காலத்தில வேட்டைத்திருவிழா எண்டால் கும்பளாவளை பிள்ளையார் கோவிலில் நடக்கும் வாழை வெட்டுக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவிலிருந்து அம்மாளாச்சி வருவா அது பெரிய திருவிழா மாதிரி நடக்கும் .
காலமெண்டும் காத்திருப்பதில்லை தானே அப்படியே விடலைப்பருவத்துக்குள் வந்தாச்சு அதாவது ஆண்டு 11 படி்க்கிறகாலம் சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே "வாணி விழா" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். எந்த விதமான களியாட்டங்களையும் விரும்பாத வேலாயுதம் ஆசானுடைய மணி கல்வி நிலையமும் இதுக்கு விதிவிலக்கில்லை . நாங்க தான் பெரியாக்கள் எண்ட நினைப்பு வேற இருக்கும் சும்மா ஏரியாவையே அதிரப்பண்ணிவிடுவோமில்ல ? . ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகங்கள் அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்தில் இரா செல்வவடிவேல் சேர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு விஞ்ஞானம் பாடத்தில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார். (அது அவர் எழுதிக விஞ்ஞான விளக்கப்புத்தகமாய்த்தானிருக்கும்) இதற்காகவே சிலர் மாய்ஞ்சு மாய்ஞ்சு படித்ததும் ஞாபகத்தில் நிற்கிறது :) அத்தோட பட்டிமன்றம் என்று ஆரம்பித்து செல்வவடிவேல் சேரை நடுவில இருத்தி தீர்ப்புச்சொல்லவேணும் என்று சொல்வதும் பட்டிமன்றம் சூடு பிடிக்கிற தறுவாயில் உணர்ச்சி வசப்பட்டு சில பொம்பிளைப்பிள்ளையள் அழுவதும் பின் சேர் இரண்டு தரப்புக்கும் சமனாக மதிப்பெண்கோடுப்பதும் மறக்கமுடியாதவை
கடைசி நிகழ்ச்சியாக இசைகச்சேரி வைத்தால் தான் விழா நிறைவாய் அமையும் எண்டு நண்பன் சதீஸ் " செம்பருத்திப்பூவே " பாடிக்கொண்டிருக்க வேலாயுதத்தார் வந்து அப்பன் இனிக்காணுமெண்டு சொல்லி வாணிவிழாவை முடித்து வைத்தது தான் எமது வேலாயுதம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா

இனி எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது அனேகர் வாழ்வில் பொற்காலம் எங்கட பாடசாலை கிறீஸ்தவப்பாடசாலை என்றாலும் வாணி விழாவுக்கு குறைச்சலில்லை நாங்களே எல்லாப்பாடசாலைகளுக்கும் போய் மாணவர்களை வரச்சொல்லிக்கொண்டாடுவதும் இறுதியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அணியுடன் பட்டிமன்றம் வைப்பதும் சுவையான அனுபவங்கள் நாங்கள் இருக்கும் போது நடைபெற்ற பட்டிமன்றத்தில் என் சகபாடிகள் கதிர் சதீசன் வசீதரன் போன்றோர் பேசும்போது பின்னால் வேட்டியை மடிச்சுக்கட்டிக்கோண்டு விசில் அடிச்சதும் இன்னும் பசுமையாய் நிற்கிறது மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் Half Saree கட்டுவதும் இந்த நாட்களில் தான்

அதன்பின் நீண்ட காலத்தின்பின் அண்மையில் சந்தித்த நண்பர்களுடன் சேர்ந்து வாணிவிழா கொண்டாடினோம் ?ஆனாலும் முந்தையமாதிரி சுவையான அனுபவங்கள இருக்கவில்லை ஏதோஓர் வெறுமையே இருந்தது






Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP